கடந்த வாரம் பாரத் கியாஸிற்காக பதிவு செய்தேன். இரண்டு நாட்களில் கியாஸ் வினியோகத்திற்கான மெசேஜ் வந்தது. விலையை பார்த்தேன் 904.50. கடந்த இரண்டு மாதத்திற்கு முன் 838.50 ஆக இருந்தது ஒரே அடியாக 66 ரூபாய் ஏற்றம். யாரிடமும் பகை ஏற்படவில்லை என்றாலும் மனதிற்குள் ஒருவித வேதனை தோன்றியது. 838.50 விலைக்கு டெலிவரியின் போது 880 கேட்டனர். அப்படியென்றால் 904.50க்கு எத்தனை கேட்பார்கள். எதிர்பார்த்த போன்று டெலிவரி நாளில் 990 ௹பாய் கேட்டனர். சாதாரணமாக மறு கேள்வி கேட்காத நான் 920 மட்டுமே தர முடியும் என்றேன். டெலிவரி செய்யும் தொழிலாளி, முதலாளியிடம் பேசுங்கள் என போன் போட்டு தந்தார். இரண்டு தொழிலாளி, வாகன செலவு என ஏகப்பட்ட செலவு இருக்கு சார் 990 கொடுக்கணும் என்றார் முதலாளி. பில் தொகை மட்டும் கொடுத்தால் போதும் என்கிறார்கள், அப்படியிரந்தும் 15.50 அதிகமாக சேர்த்து 920 தருகிறேன். செலவுக்கு பத்தாது என்றால் கியாஸ் திருப்பி எடுங்கள் என்றேன். எனது முடிவை ஏற்று கியாஸ் டெலிவரி செய்தனர். இரண்டாவது நாள் மானிய தொகை வங்கியில் வந்தது 401. 40. விலையேற்றத்திற்கு தகுந்து மானியமும் உயர்ந்திருக்கிறது. மொத்தத்தில் விலை உயர்வு 3.25 மட்டும்.
ஏன் இப்படி... விலையை கண்டபடி ஏற்றிவிட்டு மானியமாக திருப்பி தருகின்றனர். ஏஜண்டிற்கு செலவு தாங்க முடியாமல் வாடிக்கையாளர்களிடம் 85 ரூபாய்க்கு மேல் அதிக வசூல். அரசின் கொள்கையா?.... எண்ணை நிறுவனங்கள் தரும் சுமையா ? எதிர்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு அரசு வாய்ப்பு கொடுக்கிறதா... இல்லை தந்திரம் எதாவது மறைந்திருக்கிறதா?