ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் 10–ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, தேரோட்டம் நடைபெற்றது.
முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரோட்டமும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான்–வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரோட்டமும், தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரத வீதிகளில் தேர்களை வடம் பிடித்து தேர்களை இழுத்து சென்றனர். இன்று இரவில் சுவாமி–அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்