For Advertising... Please Contact - 9940542560

கருணாகரன் வாத்தியார் - புத்தன்துறை கடற்கரை கிராமம்

Puthenthurai  |      1  |   

சப்தமில்லாமல் சுத்தம் செய்கிறார்!


புத்தன்துறை என்கிற இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை கிராமம் நாகர்கேவிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த கடற்கரை மட்டுமே நாகர்கோவிலுக்கு மிக அருகாமையில் இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

கருணாகரன் வாத்தியார் வீடு எங்கிருக்கிறது என்று கேட்டால் சின்ன குழந்தைகள்கூட 'யாரு கடற்கரையில் குப்பை பொறுக்குவாங்களே அந்த தாத்தா வீடுதானே அதோ இருக்கு ' என கைகாட்டினார்கள். அந்த அளவுக்கு கருணாகரன் வாத்தியார் பேமஸ்.

வாசலில் ஆன்ரூஸ் கார்டன் வரவேற்கிறது என பதாகை நம்மை வரவேற்கிறது. தென்னை மா பலா என பூந்தோட்டங்கள் நிறைந்த பண்ணை வீடு சோலையாக காட்சி தருகிறது. அடர்ந்த நிழலின் ஊடாக வெயில் கீற்றாக ஊடுருவி வெளிச்சம் போட அந்த பண்ணை வீடு நந்தவனமாக இருக்கிறது.

சாய்வு நாற்காலியில் ஓய்விலிருந்த கருணாகரன் வாத்தியரை சந்தித்தேன். அவரது துணைவியார் தந்த தேனீரை சுவைத்தவாரே அவரோடு உரையாடினேன்.

அந்த காலத்தில் எங்களது பள்ளியில் படிக்க வருகிற மாணவர்கள் பெரும்பாலும் ஏழை எளியோர்களே பெரிய பின்புலமே இல்லாத குடும்பங்களிலிருந்தே படிக்க வந்தனர்.படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை அப்போதே செய்வதுண்டு,சாப்பாடுகூட குழந்தைகளுக்காக என்னோட வீட்டிலிருந்தே எடுத்து செல்வேன்.அதெல்லாம் ஆர்த்மாத்தமான விசயம் என்கிறார்.

ஆமா கடற்கரையில் குப்பை பொறுக்கிறதை எப்போது ஆரம்பிச்சீங்க ? என்றபோது

அதெல்லாம் ரெம்ப வருடங்களா சப்தமில்லாமல் செய்கிறேன். எங்க ஊர் கடற்கரை மிக அழகானது அதுமட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய இடம் அது சுத்தமா இருந்தா நமக்கும் பெருமைதானே, நான் மட்டும் சுத்தம் பண்ணினால் போதுமா கடற்கரைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் அந்த அறிவு வேண்டும் தேவையில்லாத பொருட்களை கரையில் வீசுவதை முதலில் தவிற்க வேண்டும்.

தினமும் மாலை அரைமணி நேரம் குப்பை பொருக்குவதற்காக செலவிடுவேன். அதன் பின்பு அப்படியே என் வயது நண்பர்களோட கடற்கரையில் அமர்ந்து கருக்கல் வரை நேரம் செலவிட்டு வீடு செல்வது வழக்கம்.

எனக்கு 82 வயதாகிறது ரெம்ப குனிந்து நிமிர்ந்து குப்பை பொறுக்க இயலவில்லை இருந்தாலும் அது எனது பணி என்கிற வாஞ்சையோடு செய்கிறேன் என்றார்.

பாரத பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் கடற்கரையில் குப்பை பொறுக்கியதை பார்த்தீர்களா என்றேன்.

ஆமாம் அது நல்ல விசயம் தான்,அதனை பார்த்து ஏத்தனை பேர்கள் அது போல செய்யவருகிறார்கள் என பார்ப்போம்.

குப்பையை தோள்களில் தூக்கி சுமக்கிறது மாதிரி ஒரு போட்டோ எடுக்கிறேன் என்றேன்,சிரித்துக்கொண்டே இது மோடி போஸ் அல்லவா என்று நமட்டு சிரிப்பு சிரித்தார் கருணாகரன் வாத்தியார்.

எங்கூர்ல ஒரு இடத்தில பள்ளமாகி மழை தண்ணீர் தேங்கி கிடந்திச்சு அந்த பக்கத்தில் உள்ளவங்க ஒரு விளம்பரம் எழுதி வச்சாங்க

'இந்த இடத்தை உடனடியாக பஞ்சாயத்து அல்லது சம்பந்த பட்ட துறையினர் இதனை சரி செய்ய வேண்டும் ' என்று கொஞ்ச நாளா அப்படியே தான் இருந்திச்சு பார்த்தேன் என்னோட சொந்த செலவில் அந்த இடத்தில மண்ணை கொட்டி சீர் செய்து கொடுத்தேன். அது போலவே ஊர் பஞ்சாயத்து லைப்ரரி முன்னாடியும் ஒரு பெரிய பள்ளம் அதனையும் சரி செய்தேன், அங்க லைப்ரரியனா வேலை பார்க்கிற மாற்றுத்திறனாளி பெண் இப்போ கொஞ்சம் சவுகரியமா போகிறதை பார்க்கும் போது மனது நிறைவாக இருக்கிறது என்கிறபோது அவரை அறியாமலே அவரது கண்களில் நீர் கோர்த்து நின்றது.

இறைவன் எனக்கு நிறைய தாலந்துகளை தந்திருக்கிறார் அதனில் கொஞ்சமா செலவு செய்வதில் ஏதோ ஒரு வகையில் நிறைவடைகிறேன் என்றார்.

வயது ஒரு பொருட்டல்ல சமூகபணிக்கு உத்வேகம் மட்டுமே தேவை என்பதனை உணர்ந்தவனாக கரம் பற்றி வாழ்த்தி விடை பெற்றேன் அந்த பெரியவரிடம்.

சபாஷ் வாத்தியாரே...



Courtesy: SK Gangadharan & Jawahar Clicks.


   1  |   

Other Pages