வாய்க்கொழுப்பு சீலையில வடியுது!


கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பேசப்படும் ஒரு பழமொழி “வாய்க்கொழுப்பு சீலையில் (சேலையில்) வடியுது”. இந்த பழமொழி எப்படி வந்தது குறித்து டாக்டர் அ.கா.பெருமாளிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன கதையைக்கேட்டபோது, அடடே இந்த பழமொழிக்குப்பின் இப்படி விஷயம் இருக்கிறதா? என ஆச்சரியப்பட்டேன்.
அந்த கதை... 
அந்தகிராமத்திலுள்ள் விவசாயியின் மனைவி ஒரு நாள் செத்துப்போனாள். விவசாயிக்கு சொந்த பந்தம் யாரும் இல்லை. பிள்ளைகுட்டிகளும் இல்லை. அதனால் அவனே தனியாக சமைத்துச்சாப்பிட்டான்.
அவனுக்கு குழம்பு வகைகளும் காய்கறிகளும் வைக்கத்தெரியும்.அவனுக்கு சாதம் வடிக்கத்தெரியாது.அவன் சாதம் வைத்தால் குழைந்து விடும், அல்லது பருக்கையாகக்கிடக்கும்.
ஒரு நாள் அவன் சாதம் வடிப்பது எப்படி? என்று பக்கத்து வீட்டுக்கிழவியிடம் கேட்டான். அவள் அவனது பரிதாப நிலையை பார்த்து நான் சாதம் வடித்து தருகிறேன். பார்த்து படித்துக்கொள் என்றாள்.
கிழவி அடுப்பில் உலை வைத்து அரிசியை அளைந்து போட்டாள். உலை கொதித்தது.
கிழவி குந்தியிருந்து அடுப்பில் விற்கைத்தள்ளினாள். நெருப்பு சரியாகப்பற்ற் வில்லை. அவள் ஊது குழலை எடுத்து வாயில் வைத்து ”ப்ப்ப்ப்பூத்து ப்ப்ப்ப்ப்பூத்து” என ஊதினாள். அந்த நேரத்தில் அவளுக்கு பின்புறம் வாயு பிரிந்தது.
இதைப்பார்த்த விவசாயி,”ஏய் பாட்டி.. வாயு வாயிலிருந்து மட்டும் போனால் போதாதா.? பின்னாலேயும் போகணுமா?”என்று குறும்பாகக்கேட்டான்.
விவசாயி இப்படிக்கேட்டதும் கிழவிக்கு கோபம் வந்தது. உலையில் வெந்தும் வேகாமலும் இருந்த சாதத்தை அவன் மேல் துண்டில் கொட்டிவிட்டு விடுவிடுவென வேகமாகப்போய்விட்டாள்.
அவனோ,”பாட்டி கோபப்படாதே தெரியாமல்; பேசிட்டேன்.மன்னிச்சுக்கோ!”என்றான். கிழவி கேட்கவில்லை.வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
விவசாயி மேல் துண்டை தூக்கிப்பிடித்துக்கொண்டு அவள் பின்னே நடந்தான். அவனது துண்டிலிருந்து சூடான கஞ்சித்தண்ணீர் சொட்டு சொட்டாய் வடிந்தது.
இதைப்பார்த்த இன்னொரு கிழவி ”இது ஏனப்பா? இப்படி வரே.. என்ன நடந்தது?” என்று கேட்டாள்.
விவசாயி,”வாய்க்கொழுப்பு சீலையில வடியுது!”என்றான்.

திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 5629