கன்னியாகுமரி ரயில் நிலையம் செல்லும் வழியில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய சிவலிங்கம் அமைந்துள்ளது சிறப்பாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளர்ணமி நாளன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன் கொடுக்கும் என்பது நம்பிக்கை. புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி, 70 வகையான அபிஷேகப் பொருள்களில் ஒன்று அன்னம். அன்னத்தால் அபிஷேகம் செய்தால் சாம்ராஜ்யம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனமும், தொடர்ந்து அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னம் படைக்கப்பட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம்நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து உள்ளனர். இதைத் தொடர்ந்து உச்சிகால பூஜை, அலங்கார தீபாராதனையைத் தொடர்ந்து அன்னதானம் ஆகியன நடைபெற்றது.