உச்சரிப்பின்படி உங்கள் ஊர்பெயரை அரசாங்கம் மாற்றுவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு!


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர்ப்பெயர்களை மாற்றம் செய்யப்படவுள்ளது அதற்கு பொதுமக்கள் கோரிக்கைகள் எழுதி அனுப்பலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரால், சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைக்கப்படும் சான்றாக திருவல்லிக்கேணி என்பதை டிரிப்ளிகேன் என ஆங்கிலத்தில் குறிப்பிடாமல் திருவல்லிக்கேணி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுதல்) என்று அறிவிப்பினை செயற்படுத்தும் வகையில் தமிழக அரசால் உயர்நிலைக்குழு அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே தலைமையில் உயர்நிலைக்குழு கூடி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், வருவாய் கிராமங்கள், ஊராட்சிகள் உள்ளிட்ட ஊர்ப்பெயர்களை மாற்றம் செய்யவுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் ஊர்ப்பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்திட கோரிக்கைகள் இருப்பின், அவற்றை எழுத்துப்பூர்வமாக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியரகம், நாகர்கோவில் என்ற முகவரிக்கு நேரிலும், அஞ்சலிலும், ngltamilvalarchi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலிலும் 15.11.2018க்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெறப்படும் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு பெயர் மாற்றம் செய்திட அரசுக்குப் பரிந்துரை செய்து அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

நான் தமிழ்வளர்ச்சிக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள “ திருவட்டாறு” மிகவும் தொன்மையான ஊர். இங்கு ஓடும் பறளையாறு வாட்டமின்றி எப்போதும் ஓடிக்கொண்டிருப்பதால் வாட்டாறு என்று பெயர் ஏற்பட்டதாகவும், இங்கு அருள் பாலிக்கும் திருவாகிய ஆதிகேசவப்பெருமாளைச்சுற்றி ஆறு ஓடுவதால் திருவாட்டாறு என பெயர் ஏற்பட்டதாகவும், பின்னர் திருவட்டாறு என வழங்கப்பட்டதாகவும் முன்னோர்காள் கூறுகின்றனர். 
அரசு அலுவலகங்களில் திருவட்டார் என குறிப்பிடுகின்றனர். ஆறு என்ற விகுதியின்படி திருவட்டாறு என்றே எழுத வேண்டும். ஆனால் அரசு அலுவலகம் மற்றும் ஊர் பலகைகளில் திருவட்டார் என்றிருப்பது இலக்கணப்பிழையாகத்தெரிகிறது. எனவே தாங்கள் தயவு செய்து பெயர் மாற்றவிருக்கும் இப்பொன்னான தருணத்தில் அரசு அலுவலகங்களில் திருவட்டாறு என பெயர்மாற்றம் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
அதுபோல் கோட்டார் என்பதை கோட்டாறு என பெயர்மாற்றுமாறும் வேண்டுகிறேன். என வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

அன்பான நண்பர்கள் தங்கள் ஊர் பெயர் பதிவு உச்சரிப்பின்படி தவறு என தெரிந்தால், சரியான உச்சரிப்புடன் அரசுக்கு கடிதம் எழுதி சரியான முறையில் பெயர் பதிவாக முயற்சி செய்யுங்கள்.

திருவட்டாறு சிந்துகுமார் Posted by திருவட்டாறு சிந்துகுமார்

Reporter at Kumudam No.1 Tamil Weekly

views: 1708
   

 

News Discussion

Leave a Comment

Note: HTML is not translated!