”மக்கா, கொஞ்சம் இருடே, ஏத்தம் பழம் அடுப்புல போட்டிருக்கேன். கொஞ்சம் வெந்ததும் எடுத்து தரேன்!”
சற்று நேரத்தில் மஞ்சள் நிறத்தில் இருந்து, விறகு அடுப்பு தீக்கனலில் லேசாக வெந்து, தோலெல்லாம் கருநிறம் கொண்டு வெந்த நேந்திரம் பழத்தை அடுப்பிலிருந்து லாவகமாக கரண்டியில் எடுத்து பிளேட்டுக்கு மாற்றினார் அம்மா.
பின்னர் மெதுவாக தோல்களை அகற்றி இன்னொரு பிளேட்டில் பழத்தை மாற்றியவர் கத்தியால் துண்டு துண்டாக நறுக்கினார். பழம் சூடு லேசாக ஆறியதும் கொஞ்சம் சீனியைத்தூவியைத்தூவி சாப்பிடத்தந்தார். அப்பப்பா சுட்ட பழம், சீனியும் சேர்ந்து தித்தித்தது.
அம்மா சிறுவயதில் நேந்திரம் பழம் அடுப்பில் போட்டு சுட்டுத்தந்த ஞாபகம் வர நேந்திரம் பழம் வாங்கி ஸ்டவ்வில் வைத்து வேகவைத்தேன். ஒவ்வொரு பகுதியாக வேக வேக புரட்டிப்புரட்டி வேகவைத்தேன். பின்னர் தோல் அகற்றி, பிளேட்டுக்கு மாற்றி, துண்டு துண்டாக வெட்டி, சீனி (வெள்ளை சர்க்கரை) தூவி சாப்பிட்டேன். ஆஹா..ஆஹா.. ருசியோ ருசி..சீனி அல்லது தேன் சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.
காலையில் 3 இட்லி, வடையுடன், ஒரு சுட்ட பழமும் சாப்பிட்டோம்னா மதியம் வரை தாக்குப்பிடிக்கும்.
சிறுவயதில் சூடு ஆறுவதற்குள் பழத்தை வாயில் போட்டு நாக்கு வெந்த அனுபவமும் உண்டு.
அம்மா தீக்கனலில் போட்டு சுட்டுத்தந்த பழத்தின் சுவை அளவுக்கு ஸ்டவ் அடுப்பில் சுட்ட பழத்தில் இல்லை என்பது சற்று வருத்தமே!