108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதிவரை (செப்டம்பர் மாதம் 19 முதல் 25 வரை) மாலையில் அஸ்தமிக்கும் சூரியக்கதிர்கள் ஸ்ரீகோயில் கருவறை வரை பாய்ந்து செல்லும் அதிசயம் நடைபெறும்.பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத துவக்கத்தில் மாலைச்சூரியனின் மயக்கும் பொன்னிற கதிர்கள் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் பெருமாளின் பாதத்தில் விழும் வகையில் கோயிலை வடிவமைக்கும்ப்போதே முன்னேற்பாட்டுடன் அமைத்துள்ளார்கள்.
இப்போது கோயில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதால் கருவறையின் முன்புற மண்டபத்தில் உள்ள வாசல் கதவு திறக்கப்படுவது இல்லை. இதனால் கதவில் சூரிய ஒளி மாலையில் பாய்வதைக்காணலாம். இன்று மாலை சென்றிருந்தபோது சிவப்புப்பழமாக மறையத்துவங்கியிருந்த சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையின் முன்புற பகுதியில் விழுந்தது. இந்த அபூர்வ காட்சியை இன்று (25 .9.2018)மாலை 6 மணி அளவில் கோயிலுக்கு வந்தால் காணலாம். கன்னியாகுமரி மாவட்டத்தலைநகர் நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ.தொலைவில் திருவட்டாறு அமைந்துள்ளது.
மீனா எஸ். குமார்