கன்னியாகுரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா நடந்தது. தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்களும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் அவர்களும் கலந்து கொண்ட அந்த விழாவில், குமரி மாவட்ட வளர்ச்சிக்காகப் பல்வேறுத் திட்டங்கள் அறிவிக்கப்படும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
அந்த எதிர்பார்ப்பில் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது ரப்பர் தொழிற்சாலையாகும். இந்தியாவிலையே மிகவும் தரம் வாய்ந்த ரப்பர் கிடைக்கும் ஒரே இடம் குமரி மாவட்டம். இம்மாவட்டத்திலுள்ள நான்கு தாலுகாக்களில், விளவங்கோடு, கல்குளம் ஆகிய இரு தலுகாக்களையும் இந்தியாவின் பணக்கார மரமான ரப்பர் மரம் அபகரித்துள்ளது. இவ்விரு தாலுகா மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் இம்மரத்தையே சார்ந்துள்ளது.
நீண்ட நெடும் காலமாக இம்மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும் என ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளிப்பது வாடிக்கையாகியுள்ளது. ஆனால் காலங்கள் இத்தனைக் கடந்த பின்பும் எந்த அரசும், இங்கு ரப்பர் தொழிற்சாலை அமைப்பதற்கு முன்வரவில்லை.
இந்நிலையில் தற்போது குரிமாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் இதற்கான அறிவிப்பை, முதலமைச்சர் வெளியிடுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு குமரி மாவட்ட அனைத்து மக்களிடமும் இருந்தது. ஆனால் முதலமைச்சர் அதைப்பற்றி எதையும் கண்டுகொள்ளாமல், வாய்திறக்காமல் சென்றது குமரி மாவட்ட மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.